எருக்கலை -ஒரு பக்க கதை
சிறுகதை
எருக்கலை
அவள் எப்போதும் அந்த தெருவின் மகாராணி, ஊர் பெயர் சொந்தம் பந்தம் என்றெல்லாம் அவளுக்கு யாரும் கிடையாது எதுவும் கிடையாது.
அவளை காண்போர் எல்லாம் அவளுக்கு உறவு. யார் தந்தாலும் சரி மூன்று வேளையும் இல்லை அதுக்கும் அதிகமாகவோ உணவு இருக்கிறதா அது வரை சரி,
உறங்குவதற்கு வெயிலோ புழுக்கமோ புழுதியோ, இடியோ, மின்னலோ மழையோ ஒரு ஜான் இடம் இருக்கிறதா சரி , அப்படி என்ற அசட்டு வாழ்க்கை தான் அவளுடையது.
அவளுக்கு ஏதேனும் குறிக்கோள் இருக்கிறதா? தெரியாது.. ஏதேனும் இழக்காவது இருக்கிறதா? தெரியாது.. ஒருவேளை இருக்குமோ சொல்லப்போனால் அவளுக்கு ஒரு வேலையும் கிடையாது..
அதேபோல அவளுக்கு ஒரு இடத்தில் நிற்கவே நேரம் இருக்காது.. ஏன்? அப்படி அந்த கேள்வி என் மூளை இடுக்குகளில் அவளை காணும் போதெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கும்.
அதற்கு விடையை என் மனம் துரத்திக் கொண்டே தான் இருக்கிறது . தினமும் அந்த பெரிய சூப்பர் மார்க்கெட்டின் வாசலின் முன்னே சல்லடை கம்பியினால் ஆன மதில் அருகில் தான் இருப்பாள்.
யார் அவளை கடந்து போனாலும் அந்த ஒரு ஒற்றைப் பார்வையிலேயே மொத்த கதையையும் கூறிவிடுவாள் தந்திரக்காரி.
அது மட்டுமா அழகியும் தான்.. அவள் வாழ்ந்த கதை தெரியுமா? பெண்ணென்று ஒற்றைக் காரணத்திற்காக தெருவில் நிற்கும் கதையை சொல்லவா? இந்த மகாராணியைப் போலவே அவள் அம்மாவும் அத்தனை அழகானவள்.
வெளிர் என்று தோலில் ஆங்காங்கே கண் திருஷ்டி போல கொஞ்சம் பழுப்பும் அழகிய வெண் சங்குக்கு திருஷ்டியிட்டது போல, நல்ல உருண்டையான கண்களும் தான்.. பிறந்த குழந்தையின் பாதம் தெரியுமா? பாதம் அதைப் போல அத்தனை அழகான இளஞ்சிவப்பு நிறமவள் மூக்கு .
அழகிய இராட்சசியை போல பற்கள் அம்மாவின் ஜாடையை உரித்து வைத்து இரட்டையராய் பிறந்த மகாராணி, அத்தனை சின்னஞ்சிறு குட்டியாக மரம் நின்று கழன்று விழும் எருக்கலைப் போல அத்தனை மென்மையானவள். மென்மைக்கே பிடித்தவள் அவள் சினுங்களும் மென்மையும் சுறுசுறுப்பும் அனைவரையும் ஈர்த்தாலும் அவள் பெண் பிள்ளையாயிற்றே.
காலம் அதன் வேட்கையை தீர்த்தது அவளை அவள் தாயிலிருந்து பிரித்தது. தெருவோரம் வீச வைத்தது. என்ன செய்வாள்? அந்த சின்ன கண்களுக்கும் அந்தப் பிஞ்சு பாதங்களுக்கும் போக்கிடம் தேடி அலைவதே வேலையானது.
அலைந்து திரிந்து தஞ்சம் ஆனது தான் அந்த பெரிய சூப்பர் மார்க்கெட் .அழகு பதுமை அவள் வெண்மையும் மென்மையும் பதுமைமாக வளர்ந்தாள்.
அனாதையாக யாருமற்றிருந்தவள் ஒரு துணையை கண்டால் விட்டுவிட தான் மனம் வருமா துணை யாரோவாக அறிமுகம் ஆகி நட்பாகத் துள்ளி திரிந்து சுற்றித்திரிந்த நாட்கள் அவளுக்கு அத்தனை இனிமையானவை.
செல்லமாக இவள் கடித்து விளையாடுவது எல்லாம் அவனுக்கு உணர்வை தந்தது .இருவருக்குள்ளும் காதல் புகுந்தது சொந்தம் என்று யாருமில்லை கேட்பதற்கோ நாதியில்லை தங்குவதற்கு இடமில்லை சாஸ்திரங்கள் தெரியாது விதி என்று அவர்களுக்கு ஏதுமில்லை .. தாலி என்று கட்டுப்பாடு இல்லை கேட்பாரற்ற காதல் ஜோடிக்கு புணரும் வரை தான் காதல்.
அவனுக்கு அவன் வேலை முடிந்தது. அவனுக்கும் நிற்பதற்கு நேரமில்லை செய்வதற்கு வேலையும் இல்லை கைவிட்டு தொலைதூரம் மறைந்தே போனான்.. இவள் வாழும் காலமெல்லாம் பசிக்கும் பாசத்துக்கும் பிச்சை எடுக்க வேண்டும், என்று தெருவோரம் வீசப்பட்டவள் தானே புணர்ந்தவன் மறைந்தே போக திக்கற்று நின்றவளுக்கு என்ன தெரியும் அவன் விட்டுப் போனது, அவளுக்கு பேரிடியா இல்லை, இவ்வளவு நாள் இருந்தான் இப்போது இல்லை என சாதாரணமாக நகர்வாளா?
அவள் மனமொழி எனக்குத் தெரியாது நாட்கள் நகர்ந்தன அந்த சூப்பர் மார்க்கெட் வாசலில் சோர்ந்தே கிடப்பாள். அந்த கண்ணின் மொழிக்கு வார்த்தை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். இரண்டொரு கிழமைகள் கடக்கிறது.
அவளை என் வேலை நிமித்தமாக, நானும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவளைப் பற்றிய எண்ணம் மட்டும் எனக்கு அவ்வப்போது வந்து செல்லும் ஏதேனும் ஒரு பெரிய பிரச்சினை வரும்போது எல்லாம் நான் அவளை நினைத்துக் கொள்வேன், நான் அவளை போலவா இருக்கிறேன்..என்று சில நேரம் கோபமாக நினைத்துக் கொள்வேன்.
சில நேரம் நன்றி உணர்வில் நான் அவளைப் போலவே என இறுமாப்புடனும் நினைப்பதுண்டு.. அவளை வைத்து சில நேரங்களில் நான் சிலரை திட்டுவதும் உண்டு..
அவளைப்போல சுதந்திரம் வேண்டுமென்றெல்லாம் நினைப்பேன் ஆனால் தெருவில் அதுவும் இலங்கையில் நினைத்தாலே என் கற்பனை கூட கசப்பாகிறது.
ஒரு நாள் அந்த தெருவில் அடிக்கடி அவனை நான் சைக்கிளில் அந்த பக்கமாக காண்பது உண்டு. அன்றும் கண்டேன், ஆனால் கண்டது என்னவோ அவள் அருகில் அவளும் வேறு யாரிடமும் காண்பிக்காத ஒரு பாச உணர்வை அவனிடம் காண்பிக்கிறாள்.
ஏன் சற்று குள்ளமான உருவம் நூடுல்ஸ் போல சுருள் முடி கொஞ்சம் மாநிறம் ஒரு பதின்மூன்று,பாதினான்கு வயது தோற்றம் கொண்டவன் அவனை கண்டதும் அவளின் ஆனந்த ஆர்ப்பாட்டத்திற்கு அளவே இல்லை.. இவனுக்கும்தான் .
பாசப் போராட்டம் முடிந்து அவன் அவசரமாக அந்த சூப்பர் மார்க்கட்டுக்குள் சென்று காற்சட்டை பையில் இருந்து சில்லரை சில்லரையாக தொன்னூறு ரூபாயை எடுத்து ஒரு பன்ரொட்டி வாங்கிக்கொண்டு அதை அவளுக்கு உண்ண கொடுத்து அவளின் தலை மேல் தடவிக் கொடுத்து விடை பெற்றான்.
எனக்கென்னவோ அவர்களின் கதையை அறிய வேண்டும் என்று ஆவலாகவே இருந்தது. அவனை நோக்கி நான் நகர்வதற்குள் அவ்விடம் விட்டு சைக்கிளில் புறப்பட்டு விட்டான்.
அதன் பிறகு அவனை வெகு நாட்களாக அங்கு நான் காணவே முடியவில்லை. திடீரென ஒருநாள் அவளை நான் பார்க்கும்போது அவள் உருவத்தில் ஒரு மாற்றம் பார்ப்பதற்கு அவ்வளவு பொலிவாகவும் அழகாகவும் இருந்தால்.
உடலும் சற்று பருமனாய் இருந்தது. கூடவே வயிறும் தான் அப்போதுதான் எனக்கும் புரிந்தது துணை என்று யாருமில்லை.. இனி அவள் பிள்ளைகளுக்கும் என்ன நிலை என்ற எண்ணம் அடிக்கடி என்னுள் வந்து போகும்.
அதிலும் அவற்றில் எத்தனை இவளை போல தெருக்களுக்கு தெரு சொந்தமாக போகிறது. ஆமாம்! நாட்கள் கழிந்தன முத்து முத்தாக ஆறு குட்டிகள் நான்கு ஆண் குட்டிகள் இரண்டு பெட்டை குட்டிகள் வெள்ளை நிறம் ஒரு குட்டி அடர் சாம்பல் நிறம் ஒரு குட்டி என பாரதி பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
எனக்கு அவற்றை பார்க்கும் போது .முதல் நாள் இரவு என் பழைய சட்டைகளை அவற்றுக்கு படுக்கையாக்கிவிட்டு சூப்பர் மார்க்கெட் அண்ணன் தந்த பன்ரொட்டியை அவளுக்கு ஆமாம் அந்த தாய் நாய்க்கு கொடுத்துவிட்டு என் போர்டிங்க்கு வந்து விட்டேன்.
மறுநாள் காலையில் ஆசையாய் குட்டிகளைப் பார்க்க ஓடோடி சென்றேன். உதிரத்தை பாலாக இரண்டு பெட்டை குட்டிகள் மட்டும் உறிஞ்சு கொண்டிருந்தன .அவள் கண்களில் கண்ணீர் வற்றி வறண்டு வெறித்தபடி இருந்தது.ஆண் குட்டிகளை காணவில்லை.
<<<<இவற்றையும் படியுங்கள் >>>>>



