சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
சிவனை பூசித்து வழிபடும் சிவ பக்தர்கள் மகாசிவராத்திரி தினத்தில் எவ்வாறு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.

விரதங்களில் மகத்துவம் மிக்கதும் தனிச் சிறப்பு மிக்கதும் மஹா சிவராத்திரி விரதமே ஆகும்.
மஹா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான (வெள்ளிக்கிழமை 17/02/2023) அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, மறுநாள் (சனிக்கிழமை 18/02/2023 சனி மஹாபிரதோஷம்) அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அதற்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை 19/02/2023) காலை தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, பிறகு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
மஹா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.
மாசி அல்லது மஹா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி வரலாறு
மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்துப் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது ‘சிவராத்திரி‘ என்றே - கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப் பூஜிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
கடைபிடிக்க வேண்டிய விரத முறை
சிவராத்திரி விரதம் குறித்து சாட்சாத் சிவபெருமான் கூறுவது என்ன தெரியுமா?
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும்,
ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.
விரதம் கடைப்பிடிப்போர்
மஹா சிவராத்திரிக்கு முதல் நாள் (வெள்ளிக்கிழமை 17/02/2023)
அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.
தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்
மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும்.
அன்று இரவு (வெள்ளிக்கிழமை 17/02/2023) முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும்.
மறு நாள் (சனிக்கிழமை 18/02/2023)அதாவது அன்று இரவு தான் மஹாசிவராத்திரி அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவசிந்தனையோடு சிவாலயத்திற்கு போய் இறைவனை வணங்க வேண்டும்.
மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.
கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம்.
சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
மறுநாள் காலையில் (ஞாயிற்றுக்கிழமை 19/02/2023) விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும்
அன்னதானம் அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவு உறங்க வேண்டும்.
சுருங்கக் கூறின் மஹா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான (வெள்ளிக்கிழமை 17/02/2023) அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி,
மறுநாள் (சனிக்கிழமை 18/02/2023) அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு
அதற்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை 19/03/2023) காலை தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, பிறகு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
விரதத்தின் அம்சங்கள்
மஹா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தைப் பாடிக்கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டுப் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.
பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களைக் கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.
பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மஹாதேவா என்று கூறிப் பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளைக் கோயில்களுக்கும் வழங்கலாம்.
கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பவனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும்போது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.
அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் “மஹா சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.
ஒரு மஹா சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரக்கூடியது என்பது நம்பிக்கை. சிவராத்திரி விரதத்தின் பலன்களை இன்னது தான் என்று கல்பகோடி காலம் ஆனாலும் எவராலும் அறுதியிட்டு கூறமுடியாது என்று கூறுகிறது சிவமஹா புராணம்.
மஹா சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.
தவிர மஹா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன்
இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.
இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்று புராணங்கள் கூறுகின்றன.
-தொகுப்பு
"சிவன் கழலே சிந்தையாம் கடையேன்"