மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 11( அரக்கு மாளிகை)
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

வாரணவதத்ததிற்குப் பாண்டவர்கள் புறப்படுமுன் அத்தினாபுரத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி பெற்றனர். விதுரனிடம் ஆசிபெறச் சென்றபோது விதுரன் சொன்னான்; "மகனே தருமா, துரியோதனன் உங்களை வாரணா வதத்திற்குத் தீயநோக்குடன் தான் அனுப்புகிறான். மிகவும் அவதானமாக இருங்கள். உங்களுக்குத் துன்பம் நேர விடமாட்டேன் உரிய நேரத்தில் உங்களுக்கு உதவ நான் மதிநுட்பமானவர்களை அனுப்புவேன்".
பாண்டவர்கள் தமக்கெனக் கட்டப்பட்ட அந்த அழகான மாளிகையில் தங்கினர். தருமன் நோட்டமிட்டான். மாளிகையை நன்கு அது எரியும் பொருட்களாற் கட்டப்பட்டது என்று தெரிந்தது அதனால்; மிகவும் அவதானமாக இருங்கள்" என்று 66 சகோதரர்களுக்குக் கூறினான்.
அப்போது விதுரன் அனுப்பிய வீரன் ஒருவன் இரகசியமாக வந்து சேர்ந்து; "மாளிகையின் பின் புறத்தில் இருந்து நீங்கள்
பாதுகாப்பாக வெளியேற இரகசியச் சுரங்கப்பாதை ஒன்றை அமைத்துள்ளேன். அதனூடாக நீங்கள் ஆபத்து வந்த வேளையில் வெளியேறலாம்'' என்றான்.
பாண்டவர்கள் அம் மாளிகையில் ஒருவருடகாலம் இருந்தனர். அப்போது அவர்கள் அங்குள்ள துரியோதனனின் காவலாளர்கள் சந்தேகப்படும் படியாக நடந்து கொள்ளவில்லை.
ஒருநாள் நள்ளிரவு வேளையில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் தருமன் வீமனை அழைத்து; "வீமா, துரியோதனன் எம்மை இந்த மாளிகையில் வைத்துத் தீ வைத்துக் கொல்ல அனுப்பிய புரோசனன் இம்மாளிகைக்குத் தீவைத்துக் கொழுத்த முன் இன்றிரவு நீ அதைக் கொழுத்தி விடு. நான் எமது தாயாரையும் சகோதரர்களையும் இரகசியச் சுரங்கப்பாதையினூடாக அழைத்துச் செல்கின்றேன்" என்றான்.
தருமனின் சொற்படி வீமன் நள்ளிரவில் அவ் அரக்குமாளிகைக்குத் தீ வைத்தான். அவ் அரக்குமாளிகையின் எல்லாப் பாகங்களிலும் தீபற்றிக் கொண்டது. அதனால் பாண்டவர்கள் தப்புவதற்கு வாய்ப்பில்லை என்று வரணாவதத்து மக்கள் பெரும் துன்பங்கொண்டு கதறி அழுதனர்.
அதை அறிந்த துரியோதனனும் சகுனியும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். திருதராட்டினனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இனித் துரியோதனனுக்கு முடி சூட்டாலாமென்று எண்ணி மகிழ்ந்தான். அதை அவன் வெளிக்காட்டாது பெருந்துக்கம் கொண்டவன் போல அழுது புலம்பினான்.
ஆனால் விதுரன் கலங்கவில்லை. பாண்டவர்கள் தனது திட்டப்படி தப்பிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தான்.
இரவெல்லாம் விழித்திருந்ததாலும், காட்டு வழியே நடந்ததாலும் குந்தி தேவி மிகவும் களைத்திருந்தாள். அதனால் அவளை வீமன் தூக்கிச் சென்றான். காட்டைக்கடந்து கங்கைக்கரைக்குப் பாண்டவர்கள் வந்து சேர்ந்தனர். அங்கே அவர்கள் தப்பிச் செல்வதற்காக விதுரன் ஒரு படகை அனுப்பியிருந்தான். அதில் ஏறிக் கங்கையின் மறு கரையை அடைந்து அங்கிருந்து காட்டுவழியாக மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றனர்.
காட்டின் நடுவே ஓர் ஆச்சிரமம் இருக்கக் கண்டு அங்கு சென்றனர். அங்கு இருந்த வியாச முனிவரைக்கண்டு மகிழ்ந்து அவரை வணங்கினர்.
அங்கு தங்கி அவரின் ஆசியைப் பெற்று, அவரின் சொற்படி பிராமண வேடம் பூண்டு ஏக சக்கர நகரத்தில் உள்ள ஒரு பிராமணனது வீட்டை அடைந்தனர்.
அப்பிராமணன் அவர்களைத் தனது வீட்டில் தங்கியிருக்க அனுமதித்தான். அதனால் மகிழ்ந்த பாண்டவர்கள் அக் கிராமத்தில் உள்ளவர்களிடம் உணவுப் பொருட்களைத் தானமாகனப் பெற்று அதைச் சமைத்து உண்டு வாழ்ந்தனர்.
Whats Your Reaction?






