முருகன் பக்தி பாடல்கள் முழுமையான வரிகளுடன்
முருகப் பெருமானை வணங்கி பாடிய பாடல்கள் அதன் வரிகளுடன்.
4. உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!
நிதி வேண்டும் ஏழைக்கு - மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!
(உலகங்கள் யாவும் உன்)
மனம் உள்ளவர் குணம் உள்ளவர் - மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை - பிறருக்குத் தர வேண்டும்!
ஆறெங்கும் நீர் விட்டு - ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே!
உந்தன் வரம் வேண்டுமே!
(உலகங்கள் யாவும் உன்)
பாடு பட்டவன் பாட்டாளி - அவன் மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் - பாரதம் பெற வேண்டும்!
நாடெங்கும் சேமங்கள் - வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! - முருகா
அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!