பங்குச்சந்தையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் பற்றி பொய்யான தகவல்கள் வழங்கப்படுகின்றனவா..?
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக, இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறுஞ்செய்தி, இணையத்தளம், வட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களின் ஊடாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் தொடர்பில் கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிந்துரைகள், எதிர்பார்க்கப்படும் விலைகளை வழங்குதல், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்குதல் மற்றும் அவ்வாறான பங்குவர்த்தகத்தில் ஈடுபடுமாறு ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுக்காக, இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இவ்வாறான போலியான தகவல்கள் வெளியிடப்படுகின்றமை முதலீட்டாளர்களுக்கு சிறந்ததொரு செயற்பாடாக அமையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பங்குச் சந்தையின் நேர்மையான தன்மைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக, இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் போலியான சந்தையொன்றை உருவாக்குவதற்கு சமமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே, இவ்வாறான போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என, இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், பங்குச் சந்தை வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில், அனுமதியளிக்கப்பட்ட உரிய தரப்பினரிடம் இருந்து மாத்திரம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.